வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குப்பைமேனி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்....!!

குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில்  பற்று போட தலைவலி குணமாகும்.
கொசுக்கடி அல்லது அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச் சாற்றை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக்  கொதிக்கவைத்துத்  தடவலாம்.
 
குப்பைமேனி இலைச் சாற்றைக் கொடுக்கும்போது, சில நேரத்தில் உடனடியாக வாந்தி எடுக்கவைத்து, அதனுடன் கோழையையும் வெளியேற்றும் இயல்பு குப்பைமேனிக்கு உண்டு.
 
குப்பைமேனியின் உலர்ந்த பொடியை ஒரு கிராம் வெந்நீரில் அல்லது தேனில் கலந்து கொடுக்க, கோழை வருவது மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக்  கட்டுப்படும். மூக்குத்தண்டில், நெற்றியில் கபம் சேர்ந்து வரும்.
 
தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
 
கால் அரையிடுக்குகளில் கடும் அரிப்பைக் கொடுத்து, சில நாட்களில் அந்த இடத்தைக் கருமையாக்கி, பின் அந்தத் தோல் தடிப்புற்று, அடுத்த சில மாதங்களில்  தடித்த இடம், அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும் பூஞ்சைத்தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
 
புழுக்கொல்லி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் புழுக்களும் அதன் முட்டையும் முழுமையாக வெளியேறாது. இரவு எல்லாம் ஆசனவாயில் அரிப்புடன் இருக்கும். குழந்தைகளுக்கு, ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க, புழுத்தொல்லை தீரும். மலக்கட்டை நீக்கி, மாந்தம்  நீக்கி, சீரணத்தை சரியாக்கி, அதன் மூலம் புழு மீண்டும் வராது.
 
மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும். மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி  இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும்.