வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த ஆவாரம் !!

ஆவாரம் பட்டையை எடுத்து உலர்த்திப் பொடித்து 20 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி என இருவேளை குடித்துவர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு ஆகியன தீரும்.

ஆவாரம் பூக்களை புதிதாகக் கொண்டு வந்து கூட்டாக செய்து உணவுக்கு பயன்படுத்துவதாலோ அல்லது உலர்த்தி சூரணித்து தேநீர் போலக் காய்ச்சி  சாப்பிடுவதாலோ உடலின் சூடு, உடலின் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதோடு உடலுக்கு பலத்தை தரும். நோய்களைத் தணிக்கும் உடலுக்கு பொன்னிறத்தை  தரும். 
 
ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும். 
 
ஆவாரம் பூவை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நீரில் போட்டு வைத்திருந்து காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வருவதால் தோலுக்கு ஏற்பட்ட சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்.
 
ஆவாரை இலையை நெய்யில் விட்டு வதக்கி ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்க கண் நோய்கள் குணமாகும் கண்களில் அழுக்கு வெளிப்பட்டு புளிச்சவாடை வருதல், கண்சிவப்பு, கண் எரிச்சல் ஆகியனவும் குணமாகும். 
 
தோல் வறட்சி ஏற்பட்ட போது ஆவாரைப்பட்டை, மஞ்சள் சிறிது கற்பூரம் ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உடல் முழுவதும் தேய்த்து வைத்திருந்து பின்னர் குளிக்க தோல் வறட்சி நீங்கி மென்மையும் நல்ல நிறமும் பெறும். 
 
ஆவாரைப்பொடியை இலை, பூ, பட்டை காய், வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு தினம் 3 வேளை உள்ளுக்கு சாப்பிட சோர்வு, மந்தநிலை மறைந்து சுறுசுறுப்பும் வீரியமும் உண்டாகும்.