1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (08:23 IST)

பிரபல ரவுடியின் கூட்டாளி என்கவுண்ட்டர்; அதிரடியாக இறங்கிய உ.பி போலீஸ்!

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளி ஒருவரை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே ஒரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் போலீஸுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீஸார் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸாருக்கு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தில் விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே பதுங்கியிருப்பதாக மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அமர் துபே போலீஸார் சுற்றி வளைக்க முயன்ற போது நடந்த தாக்குதலில் போலீஸார் அமர் துபேவை என்கவுண்டர் செய்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.