1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (15:13 IST)

கதவு இடுக்கில் சிக்கி திருடன் பரிதாப பலி! – உத்தர பிரதேசத்தில் விசித்திர சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் திருட சென்ற இடத்தில் கதவு இடுக்கில் தலை சிக்கி திருடன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள தனியல்பூர் என்ற பகுதியில் விசைத்தறி ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆலை மூடிக் கிடந்துள்ளது.

அந்த ஆலையை சோட்டமிட்ட ஜாவத் என்ற திருடன் இரவோடு இரவாக ஆலைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளார். இரவு விசைத்தறி ஆலையின் முன்வாசல் கதவை கொஞ்சமாக திறந்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். அந்த கதவின் மேல்பகுதியில் உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.


ஓரளவு கதவை இடைவெளி கிடைக்கும் அளவு கையால் இழுத்து தலையை உள்ளே விட்டுள்ளார் ஜாவத். ஆனால் கதவு மேல்பக்கல் தாழ்பாள் போட்டிருந்ததால் ஜாவத் கை நழுவியதும் கதவு அவரது கழுத்தை சேர்த்து இறுக்கியுள்ளது.

எவ்வளவு முயற்சித்தும் கதவிலிருந்து தலையை எடுக்க முடியாமல் ஜாவத் தலை சிக்கியபடியே மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். காலை அந்த ஆலை வழியாக சென்றவர்கள் கதவு இடுக்கில் தலை சிக்கி இறந்த நிலையில் இருக்கும் ஜாவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில் விரைந்து வந்த போலீஸார் ஜாவத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K