வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (12:19 IST)

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை...

தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார்.
ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை செளந்தரராஜன் இன்று பதவியேற்றார்.
 
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு, ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், தமிழிசை கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும்,ஆளுநர் தமிழிசையின் தாயார், தந்தை குமரி ஆனந்தன் ,குடும்பத்தினர் ,உறவினர்கள்,மற்றும் நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 
தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் சேர்ந்து, 20 வருடங்கள் ஆகிறது, தமிழக பாஜக தலைவராக அவர் வகித்துவந்த நிலையில்,அவரது உழைப்பையும் திறமையும் பார்த்த பாஜக தலைமை அவரைத் தெலுங்கானாவின் ஆளுநராக நியமித்தது. இந்த உத்தரவை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். 
பின்னர், தன்னை தெலுங்கானாவின் ஆளுநராக தேர்ந்தெடுத்த பாஜக தலைவர் மற்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார். இன்று, தெலுங்கானாவில் முதல் பெண் கவர்னராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.