1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (10:58 IST)

தமிழிசையின் மக்கள் அவதாரம் – அடுத்த முதல்வர் தமிழிசையா?

தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ தெரியாது. ஆனால் தமிழிசை மீது மக்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பது சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

பாஜக மாநில தலைவாராக இருந்த தமிழிசை தற்போது தெலுங்கானா ஆளுனராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தமிழகத்தில் தாமரை மலர செய்ய பலமான முயற்சிகளை செய்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தற்போது அவர் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டிருப்பதால் அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இது ஒரு பக்கமிருக்க ஆளுனர் பதவியேற்க கடிதம் கிடைத்தவுடன் மேல்மருவத்தூர் சென்ற தமிழிசை ஆதிபராசக்தி கோவிலில் வழிபாடு செய்து, பங்காரு அடிகள் கைகளால் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்ந்த குடும்பத்தில் பிறந்து, டாக்டராக பணியாற்றி, பாஜகவில் இணைந்து, செய்தி தொடர்பாளர், துணை தலைவர், தலைவர் என்று உயர்ந்து இன்று ஆளுநராக மாறி இருக்கிறார் தமிழிசை. ஆளுநராக ஆனாலும் அரசியலை விட மாட்டேன் என தமிழிசை கூறியிருந்தார்.

அதற்கேற்றார்போல் மக்களை கவரும் நோக்கில் பல்வேறு திட்டங்களில் தமிழிசை இருப்பதாக கூறப்படுகிறது. திருவேற்காடு கோவிலுக்கு சென்றவர் அங்குள்ள துப்புறவு பணியாளர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதேபோல் ஆளுநர் பதவி அறிவிக்கப்பட்டவுடன் தன்னை வாழ்த்தி போக நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வந்ததாக, அவர்களோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தமிழிசை தயாராகி வருவதாகவும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராய் அவரை அறிவிக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் இப்படி செய்து வருவதாக எதிர்கட்சி வட்டாரங்கள் பேசி வருகின்றன.