வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (15:05 IST)

ரஜினியும் கமலும் பிரதமரிடம் ஜிஎஸ்டி குறித்து பேச வேண்டும்: கேரளாவில் இருந்து ஒரு குரல்!

ரஜினியும் கமலும் பிரதமரிடம் ஜிஎஸ்டி குறித்து பேச வேண்டும்: கேரளாவில் இருந்து ஒரு குரல்!

ஜிஎஸ்டி வரி விதிப்பில் சூதாட்டத்துடன் சினிமா சேர்க்கப்பட்டதற்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ரஜினி மற்றும் கமல் ஆகியோர் பிரதமரிடம் பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


 
 
சமீபத்தில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டது. இது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுதொடர்பான தனது எதிர்ப்பை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சினிமாவும் சூதாட்டமும் ஜிஎஸ்டியில் ஏன் ஒரே பிரிவில் இருக்கின்றன?, சினிமாவும், சூதாட்டமும் எப்படி ஒன்றாகும், தாயக்கட்டை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? அல்லது மூணு சீட்டு, போக்கர் போன்ற சீட்டாட்டம் விளையாடினால் சினிமா எடுத்துவிட முடியுமா? தாயம் உருட்டவும், சீட்டுகளை குலுக்கவும் எடுத்துக்கொள்ளும் நேரமும், முயற்சியும், ஒரு திரைப்படம் எடுப்பதற்காக செலவிடப்படும் நேரமும் முயற்சியும் ஒன்றாகிவிடுமா? என்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.
 
மேலும், ரஜினி, கமலிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதில், தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த சிறிய தவறைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இது பற்றிய உங்களுடைய பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையையும், ரசிகர்களையும் காப்பாற்றும் என கூறியுள்ளார்.