1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2019 (16:26 IST)

’தமிழிசை கவர்னராக ’நியமனம் ...அரசியல் சாசனத்திற்கு எதிரானது - புதுச்சேரி முதல்வர்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேரளா மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகமது, ஹிமாச்சல் பிரதேசம் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகத் சிங் கோஷ்யாரி, மஹாராஷ்டிரா ஆளுநராகவும், கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
 
தமிழிசை சௌந்தரராஜன் வகித்து வந்த மாநில பாஜக தலைவர் பதவி, டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால், அதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எம்.பி.கனிமொழி, டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது : ஒரு மாநிலத்தின் கவர்னராக, துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என சர்க்காரியா கமிஷனில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்தபோது சிலரை நியமித்தது அதை மறுக்கவில்லை. ஆனால் தற்போது பாஜக அரசு   தம் கட்சி நிர்வாகிகளையும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களையும் துணைநிலை ஆளுநர்களாக நியமித்துவருகின்றனர். இதனால் ஆளுநர்கள் மத்திய மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவார்கள். இது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது . அதனால்தான் கட்சி சார்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என சர்காரியா கமிட்டி கூறியது.
 
இருப்பினும் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்கும் தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.