1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (10:11 IST)

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! நாளை இடைக்கால பட்ஜெட்..! குறைகிறது பெட்ரோல் டீசல் விலை?..!!

parliment
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது.
 
நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும். 
 
மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்  நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.  கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு, அமலாக்கத்துறை சோதனை, ஆளுநர்கள் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிகிறது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
petrol
பெட்ரோல் டீசல் விலை குறையுமா?
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
nirmala
குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பில் பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
parliment inside
சஸ்பெண்ட் எம்பிக்கள் பங்கேற்பு:
 
இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் கீழே குதித்து தங்கள் கைகளில் இருந்த குப்பிகள் மூலம் மஞ்சள் நிற புகைகளைப் பரப்பினர். 


நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரே கூட்டத்தொடரில் மொத்தமாக 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.