1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 மே 2024 (09:56 IST)

புது காங்கிரஸ் தலைவருக்கும் எதிர்ப்பு.. காலியாகும் காங்கிரஸ் கூடாரம்! – அதிர்ச்சியில் ராகுல்!

congress
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட டெல்லி காங்கிரஸ் தலைவருக்கும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இந்தியா முழுவதும் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி இந்த மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியிலும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆம் ஆத்மியோடு கூட்டணியில் தொடர்ந்தால் டெல்லியில் வெற்றி பெறுவது கடினம் என காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர். டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி, கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்காததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இது முன்னாள் தலைவர் அரவிந்த் சிங்கின் விசுவாசிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி மற்றும் புதிய இடைக்கால தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்களான நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் கட்சியை விட்டு விலகியுள்ளனர். அவர்களை தொடர்ந்து மேலும் சில காங்கிரஸ் பிரதிநிதிகள் விலகலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ்க்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காங்கிரஸை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K