1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (18:00 IST)

நீட் முடிவுகளை தேர்வு மைய வாரியாக வெளியிட வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

supreme court

நீட் தேர்வில் ஏற்பட்ட மோசடிகள், குளறுபடிகள் குறித்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேர நீட் தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அவ்வாறாக கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

என்றும் இல்லாத அளவு 67 மாணவ - மாணவிகள் 720 முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தது, அதில் 6 மாணவர்கள் ஹரியானாவின் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருந்தது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்து நாட்டையே கிடுகிடுக்க வைத்துள்ளது.
 

இதுகுறித்து ஏகப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர். அதை தொடர்ந்து இன்று நடந்த நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவது குறித்து வாதிடப்பட்டது.

ஆனால் முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டதாக கருதினால் மட்டுமே மொத்தமாக மறுதேர்வு நடத்த முடியும் என நீதிபதிகள் மறுதேர்வுக்கு மறுத்துவிட்டனர். ஆனால் நீட் தேர்வுகளை நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வரிசைப்படுத்தி மாணவர்களின் பெயரை மறைத்து நாளை மாலைக்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என தேசிய தேர்வு முகமை கேட்ட நிலையில் ஜூலை 20ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K