1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (15:01 IST)

காசு தறேன்.. புடிச்ச செல்போன், டேப்ளட் வாங்கிக்கோங்க! – மாணவர்களுக்கு மம்தா அதிரடி அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் ஜூன் மாதத்தில் பொது தேர்வுகள் நடக்க இருப்பதால் மாணவர்களுக்கு செல்போன் வாங்க நிதி அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக மேற்கு வங்கத்திலும் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல மாணவர்களிடம் ஆன்லைனில் படிக்க செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் இல்லாததால் 9.5 லட்சம் மாணவர்களுக்கு செல்போன் அளிப்பதாக மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.

இந்நிலையில் குறுகிய காலக்கட்டத்திற்குள் பட்ஜெட் விலையில் 9.5 லட்சம் செல்போன்கள் தயாரிப்பது சாத்தியமில்லை என செல்போன் நிறுவனங்கள் கூறியுள்ளன. சீன நிறுவன செல்போன்களை அரசு மொத்தமாக கொள்முதல் செய்ய மத்திய அரசின் விதிகளில் தடை இருப்பதால் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

ஜூன் மாதம் மாணவர்களுக்கு தேர்வு என்பதால் செல்போனாக தருவதற்கு பதிலாக மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், மாணவர்கள் அந்த தொகையில் அவர்களே செல்போன் அல்லது டேப்ளட்டை வாங்கி கொள்ளலாம் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.