1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (12:32 IST)

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா? தடுமாறும் கட்சிகள்!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாமல் போனதால் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கூட இரு கட்சிகளிடையே ஆட்சியை பங்கிட்டு கொள்வதில் மோதல் ஏற்பட்டதால் கூட்டணி பிளவுப்பட்டது.

இந்நிலையில் ஆளுனர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் சிவசேனாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுனர். இதனால் சிவசேனா – தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி அமைக்க முயற்சித்தது. நேற்று மாலை ஆளுனரை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. உத்தவ் தாக்கரே கோரிய 3 நாள் கெடுவை ஆளுனர் கொடுக்க மறுத்ததால் சிவசேனா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸை அழைத்து ஆளுனர் பேச இருக்கிறார். ஆட்சியமைக்க போதிய ஆதரவு உள்ளதா என்பது குறித்து இன்று இரவு 8 மணிக்குள் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸுக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிவசேனா அல்லது காங்கிரஸ் கூட கூட்டணி வைத்தால்தான் உண்டு. ஆனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்காது என தெரிகிறது.

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாமலும், தங்களுக்குள் மோதல் போக்குடனும் இருப்பதால் மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் நிலை வரலாம் என்றும், அதுவரை ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.