செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (13:37 IST)

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி ; பாஜக பேரம் பேசுகிறது : குமாரசாமி புகார்

தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவி தருகிறோம் என ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கிறது என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக,  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.  அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.    
 
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  
 
அந்நிலையில், ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் இன்று காலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு தேர்தலில் வெற்றி பெற்ற ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ராஜா வெங்கடப்பா நாயக்கா மற்றும் வெங்கட ராவ் நாதகவுடா என்கிர  2 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால், அக்கட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அதேபோல், காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 12 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் குமாரசாமி செய்தியாளர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
ரூ. 100 கோடி தருகிறோம், அமைச்சர் பதவி தருகிறோம் என எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுகிறது. பாஜக இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அவர்கள் எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்தால், அவர்கள் பக்கம் இருந்து நாங்கள் 2 எம்.எல்.ஏக்களை இழுப்போம் என தெரிவித்தார்.