செவ்வாய், 10 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (18:26 IST)

அவமானப்படுத்துவதும், அவமதிப்பதும் பலம் அல்ல.! ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல்!

Rahul Gandhi
ஸ்மிருதி இரானிக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த தலைவருக்கு எதிராகவோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியை சந்தித்த ஸ்மிருதி  இரானிக்கு, இந்த முறை மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை. புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டியிருந்ததால், அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் பங்களாவை காலி செய்ய வேண்டியிருந்தது. 

அந்த வகையில், முன்னாள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 28 துக்ளக் கிரசன்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பங்களாவை காலி செய்தார். தேர்தலில் தோல்வி அடைந்து, அரசு பங்களாவை காலி செய்த ஸ்மிருதி இரானி குறித்து சிலர் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஸ்ருதி ராணிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  "வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஸ்மிருதி இரானிக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த தலைவருக்கு எதிராகவோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல என்றும் பலவீனத்தின் அறிகுறி என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.