செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (17:52 IST)

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை நாள்.! மத்திய அரசு அறிவிப்பு..!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா
எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் எனவும், நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் இதே தினத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.  
 
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  1975 ம் ஆண்டு ஜூன் 25 ல் அப்போதைய பிரதமர் இந்திரா, சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக நாட்டின் மீது எமர்ஜென்சியை திணித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
எந்தத் தவறும் செய்யாத நமது லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் ஊடகங்கள் குரல் ஒடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 25 ம் தேதியை அரசியல்சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அமித்ஷா, இந்த நாளில் எமர்ஜென்சியின் போது மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த மக்களின் பங்களிப்புகள் நினைவு கூறப்படும் என்று கூறியுள்ளார்.                                                                                                
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முடிவானது, அடக்குமுறை அரசாங்கத்தின் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை புதுப்பிக்க போராடிய லட்ச கணக்கான மக்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


"சம்விதான் ஹத்யா திவாஸ்' அனுசரிப்பானது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனி மனித சுதந்திரத்தையும், நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும், இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், மீண்டும் இதுபோன்ற கொடூரங்களை செய்வதைத் தடுக்கும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.