வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (12:31 IST)

"தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்"... மக்களவையில் பாடிய நாகை எம்.பி. செல்வராஜ்..!

Selvaraj
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்ற பாடலை பாடி நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில் மீனவர்களின் துயரத்தை எடுத்துரைத்தார்.
 
மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்கவும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை தடுக்கவும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக  தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நாகை எம்பி செல்வராஜ், தமிழக மீனவர்களின் விவகாரம் குறித்து மக்களவையில் பேசினார். தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்ற எம்.ஜி.ஆரின் பாடலை பாடி மீனவர்களின் துயரத்தை அவர் எடுத்துரைத்தார். 


நேரம் முடிந்தது உட்காருங்கள் என ஆரம்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர், பாடல் பாட ஆரம்பித்ததும் சிறிது நேரம் ரசித்துக் கேட்டார். பிறகு மைக்கை அணைத்து அடுத்தவரை பேச அழைத்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.