1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (12:41 IST)

போலீஸிடமிருந்து தப்பிக்க “பலே” ஜம்ப் அடித்த திருடன்! – கால் உடைந்த பரிதாபம்!

அரியானாவில் போலீஸிடமிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் மாடியில் இருந்து திருடன் குதித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள துணிக்கடை குடோன் ஒன்றிலிருந்து கடந்த மாதம் 8ம் தேதி மர்ம நபர்கள் துணி ரோல்களை டெம்போவில் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணியை திருடி சென்ற டெம்போவை வேறு ஒரு பகுதியில் சோதனையில் போலீஸார் பிடித்தனர். அப்போது டெம்போவில் இருந்த திருடன் ராஜூகுமார் தப்பியோட டிரைவர் சிக்கிக் கொண்டான்.

இந்நிலையில் தப்பியோடிய ராஜூகுமாரை சமீபத்தில் கைது செய்த போலீஸார் குருகிராம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அங்கு ராஜூகுமாரை போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிறகு நீதிமன்றத்திலிருந்து ராஜூகுமாரை போலீஸார் அழைத்து வந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்ப முயன்ற திருடன் ராஜூகுமார் நீதிமன்றத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தான்.

ஆனால் கீழே குதித்த வேகத்தில் காலில் முறிவும், கையில் அடியும் பட்டதால் திருடன் ராஜூகுமாரால் எழுந்து ஓட முடியவில்லை. பிறகு போலீஸார் ராஜூகுமாரை பிடித்து அப்போதே தப்பியோட முயன்றதற்காக கூடுதலாக ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். சினிமா பாணியில் தப்பிக்க முயன்று திருடன் காலை ஒடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.