1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:19 IST)

அப்ரிடி ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை – விளாசிய கவுதம் கம்பீர்

காஷ்மீர் எல்லைக்குள் நுழைவேன் என பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு அறிவு வளரவில்லை என விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தற்போது மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்.பியாக உள்ளார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்தியாவை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார்கள். எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் மீட்கப்படும் என இந்திய அரசு தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இம்ரான்கான் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரகத்தின் பகுதி மக்களை நேரடியாக சந்திக்க போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி ”எங்கள் காஷ்மீர் சகோதரர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த செப்டம்பர் 6ம் தேதி நான் ஷாஹித்தின் வீட்டுக்கு வருவேன். விரைவில் எல்லைக்கோட்டிற்கு அருகிலேயே வருவேன்” என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் அஃப்ரிடி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்ட கௌதம் கம்பீர் “சாஹித் அஃப்ரிடி ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை. அவரை நல்ல குழந்தைகள் பள்ளியில் சேர்க்க நான் சிபாரிசு செய்கிறேன்” என்ற தோரணையில் நக்கலடித்துள்ளார்.