செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:37 IST)

வாழைப்பழம் விற்றால் அவ்வளவுதான்! தடை செய்த லக்னோ ரயில் நிலையம்

வாழைப்பழங்கள் விற்கப்படுவதால் லக்னோ ரயில் நிலையம் அசுத்தமாவதாக கூறி வாழைப்பழ விற்பனைக்கு தடை விதித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ ரயில் நிலையம் பயணிகள் அதிகம் குவியும் ஓர் இடமாகும். தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக லக்னோ ரயில் நிலையம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கு வெளியே சிறு வியாபாரிகள் சிலர் வாழைப்பழங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் ரயில்களில் பயணிக்க வேண்டி அவசரமாய் சாப்பிடாமல் கிளம்பிவிடும் பயணிகள் கூட அங்கே விற்கும் வாழைப்பழங்களை வாங்கி கொண்டு செல்வார்கள். உடனடியாக பசி போக்கும் என்பதாலும், மற்ற பழங்களை விட விலை குறைவு என்பதாலும் மக்களிடையே வாழைப்பழம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கண்ட இடங்களில் வீசுவதால் ரயில் நிலையத்தை சுற்றி அசுத்தமாகிறது என்று கூறி ரயில் நிர்வாகம் வாழைப்பழ விற்பனையை தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.