ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (12:59 IST)

மும்மொழிக் கொள்கையில் மாற்றம் – பணிந்ததா மத்திய அரசு !

மும்மொழிக்கொள்கையில் இந்திக் கட்டாயம் இல்லை எனவும் அதுவும் ஒரு தேர்வு மொழிதான் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய கல்விக் கொள்கையை வடிவமப்பதற்கான திட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு 2016 ஆம் ஆண்டு தனது வரைவை மத்திய அரசிடம் அளித்தது. அந்த வரைவில் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதன் மூலம் கல்லூரிக் கட்டணங்களை அதிகமாக்குதல், கல்வி சம்மந்தமாக கல்லூரிகள் எடுக்கும் விவகாரங்களில் அரசோ, நீதித்துறையோ தலையிடாது இருத்தல் போன்றவற்றை பரிந்துரை செய்தது.

இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சட்ட வரைவை முடித்து மத்திய அரசிடம் நேற்று ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு ஷரத்தாக மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத வேறு மொழி மற்றும் இந்திப் பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளும் கற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள் .#stop_Hindi_imposition எனும் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கினர்.

இது மாதிரியான பலத்த எதிர்ப்புகளால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன் படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது எனவும் இந்தியும் ஒரு தேர்வு மொழியாகத்தான் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதன் படி அந்தந்த மாநிலம் விரும்பும் மொழிகளை மூன்றாவது மொழியாக தேர்வு செய்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் மும்மொழிக் கொள்கையே மறைமுகமான இந்தி திணிப்புதான் அதனால் இருமொழிக் கொள்கையேப் போதுமானது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.