1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (17:45 IST)

அரசியல் எதிரிகளை பழிவாங்க ED-யை பயன்படுத்தும் மத்திய அரசு.! அரவிந்த் கெஜ்ரிவால்...!!

Aravind Kejriwal
அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் 8  முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலை, கடந்த மாதம் 23ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.  இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம் என்று அமலகத்துறை பதிலளித்திருந்தது.
 
இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 
தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும் என்றும் அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என அவர் புகார் தெரிவித்துள்ளார்.  இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றும் அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தன்னை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.