வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:48 IST)

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

smuggling
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சுங்கத் துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் பயணிகளால் நிரம்பிய விமானங்களில், சிலர் திடீரென உடல் நல பாதிப்பில் சிக்குவது, பொதுவாக தங்கக் கடத்தல் கும்பலின் வித்தியாசமான உத்தியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் சுங்கத் துறை மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி தலைமை அலுவலகத்திலிருந்து, சென்னை, திருச்சி, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தலில், புதிய தந்திரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான தங்கத்தை அதிகமான பயணிகள் கொண்டு வருவதும், விமானத்தில் ஒருவர் திடீரென உடல் நலம் குன்றியதாக நடிப்பதும் அல்லது விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் மற்ற பயணிகளுக்கு சுலபமாக தப்பிச் செல்ல உதவியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

சிறிய அளவிலான கடத்தல்களில் சிக்கியவர்கள் மீது முழு கவனம் செலுத்தப்படும் போது, பெரிய அளவிலான கடத்தல்களில் பலர் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சுங்கத் துறை எச்சரித்துள்ளது

ஆகவே, அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள்  அவர்களை தனிப்பட்ட முறையில் சோதிக்க வேண்டும் என்றும், சாதாரண பயணிகளுக்குத் தங்கத்தை கடத்த கொடுத்து, அதனைப் பின்னர் கமிஷனுடன் திருப்பிப் பெறும் குழுக்கள் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran