1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (13:32 IST)

செல்பி ஆசையால் ரயிலுக்குள் சிக்கிய பயணி! 159 கி.மீ பயணித்த ரயில்!

சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க முயன்று பயணி ஒருவர் உள்ளே சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து வருகிறார். இந்த ரயில்கள் சாதாரண ரயில்கள் போல அல்லாமல் புல்லட் ரயில் தோற்றத்தில் உள்ள நிலையில் இந்த ரயில்களில் பயணிக்கவும், ரயில் அருகே போட்டோ எடுத்துக் கொள்ளவும் பலரும் விரும்புகின்றனர்.

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலுக்குள் ஏறி அதை படம் பிடித்துள்ளார். கதவருகே உள்ளே நின்று செல்பி எடுக்க அவர் முயன்றபோது கதவு மூடிக்கொண்டதுடன் ரயிலும் புறப்பட்டுள்ளது.

Vandhe Bharat


அந்த ரயிலில் செல்ல அவர் திட்டமிட்டிராத நிலையில் திடீரென ரயில் புறப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் நடந்தவற்றை சொல்லி ரயிலை நிறுத்தி தன்னை இறக்கி விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அப்படி ரயிலை பாதியில் நிறுத்த முடியாது என டிக்கெட் பரிசோதகர் கூறியதுடன், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கதவை திறக்க சொல்லி டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் கதவை திறப்பதற்கான கட்டுப்பாடு ரயிலை இயக்குபவர்களிடம் மட்டுமே உள்ளதாகவும், அதனால் விஜயவாடா வரை பயணித்துதான் ஆக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பின்னர் விஜயவாடாவில் ரயில் நின்றதும் அவரை அழைத்து விசாரித்த அதிகாரிகள் அவர் அறியாமையால் ரயிலில் ஏறியதை அறிந்து பின்னர் எச்சரித்து ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து அவரை செல்ல அனுமதித்தனர். செல்பி ஆசையால் ஊரிலிருந்து 189 கி.மீ தூரம் அப்பால் சென்று விடப்பட்ட நபர் குறித்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K