வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (08:36 IST)

சபரிமலையில் 144 உத்தர்வு –போலிஸ், ஐய்யப்ப பக்தர்கள் இடையே அடிதடி

சபரிமலையில் நேற்று நடைதிறப்பின் போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளால் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 28 அன்று  தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு ‘பெண்களுக்கு நீண்டகாலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள்தான். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.  எனவே, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐய்யப்ப பக்தர்களும் இந்து வலதுசாரி அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வந்தன. இதையடுத்து தீர்ப்பு வெளியானதற்கு பின் நேற்று முதல் முறையாக சபரிமலை நடை ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெண் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை தடுக்க போராட்டக்காரர்கள் சபரிமலையை முற்றுகையிடத் தொடங்கினர்.

அதை முன்னிட்டு  இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் நேற்று காலையில் இருந்து ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனாலும் ஆளும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து பெண்பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பம்பை மற்றும் நிலக்கல்லில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை காலையில் இருந்து அமைதியாக கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வாகனங்களை சோதனையிடுதல், பத்திரிக்கையாளர்களை தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

நடைதிறக்கும் நேரத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் காவல்துறை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தது. போராட்டக்காரர்களும் காவல்துறை மீது கல்வீசினர். மேலும் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன. இதனால் இரு காவலர்களும் சில பக்தர்களும் காயமடைந்தனர். அதையடுத்து  அங்கு பரபரப்பான் சூழல் நிலவியதால் மேலு போலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதனால் பத்தனம்திட்டா ஆட்சியர் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளுக்கு 144 உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.