1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (21:12 IST)

அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி..! தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு.?

dmdk admk
இன்று நடைபெற்ற அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ள நிலையில் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
 
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
 
அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
பேச்சுவார்த்தையின் போது ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ராஜ்யசபா சீட் குறித்து அதிமுக தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது