1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:05 IST)

கோடி கோடியாக ரெய்டுப் பணம் – என்ன சொல்கிறார் துரைமுருகன் ?

வேலூரில் கோடி கோடியாகக் கைப்பற்றப்பட்ட பணம் தங்களுடையது அல்ல என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் முதல்முறையாக மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்தார்.

அதையடுத்து ஒருநாள் இடைவெளியில் நேற்று மீண்டும் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் ‘எங்களுக்குத் தொல்லைகளைக் கொடுத்து, எங்கள் வெற்றியைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். கடந்த 3 நாட்களாக என் மகன் கதிர் ஆனந்தை வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் சோதனை. வருமான வரித்துறை அதிகாரிகள்…வந்தார்கள்… எங்கள் பணம் இல்லை என சொன்னோம்… போய்விட்டார்கள்… நீங்கள் என்னவெல்லாமோ செய்தி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் சிமெண்ட் கொடவுனின் உரிமையாளர் பூஞ்சோலை சீனிவாசன் கைப்பற்றப்பட்ட 11 கோடி ரூபாய் பணமும் அதற்கான உரிய ஆவணங்களை தான் அளிப்பதாகவும் அந்த பணத்திற்கும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் எந்த சம்மதமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.