1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:41 IST)

ஏடிஎம் இனி தேவையில்லை: கடையில் பணம் வாங்கும் வசதி! – ஃபோன்பே திட்டம்!

Phonepe
அவசர பண தேவைகளுக்கு ஏடிஎம்களுக்கு அலையாமல் அருகில் உள்ள கடைகளின் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் வசதியை ஃபோன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கின. மத்திய அரசும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி “BHIM” போன்ற அப்ளிகேசன்களையும் அறிமுகப்படுத்தின. அதுமுதல் பல அங்காடிகள், கடைகள் போன்ற வணிக பகுதிகளில் ஃபோன்பே, கூகிள் பே, பேடிஎம் போன்ற பரிவர்த்தனை அப்ளிகேசன்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன.

அவற்றில் முக்கியமான ஒன்று ஃபோன்பே. இந்த பணப்பரிவர்த்தனை அப்ளிகேசன்கள் இடையே நிலவும் போட்டிகளால் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஃபோன்பே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஃபோன்பேவுடன் வர்த்தக தொடர்பில் உள்ள எந்த கடைகளுக்கும் சென்று ஃபோன்பே மூலம் பணம் செலுத்தி அதை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஏடிஎம்களில் காத்திருப்பது, ஏடிஎம்மை தேடி அலைவது அல்லது ஏடிஎம்மில் பணல் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாவது போன்ற பிரச்சினைகள் இன்றி எளிதாக இதன்மூலம் பணம் பெற முடியும் என்பதால் இது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் என ஃபோன்பே கணித்துள்ளது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டி பணம் செலுத்த முடியாது என்பதும், வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் அளவுக்கு ரொக்கங்களை வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்களாக பார்க்கப்படுகிறது.