1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:06 IST)

ஹர்திக் விவகாரத்தில் விதிகளை மீறியதா மும்பை இந்தியன்ஸ்?

காயத்தால் இப்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குதான் திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ள நிலையில் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி உள்ளது. ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, குஜராத்திடம் இருந்து தங்கள் அணிக்கு இழுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஐபிஎல் விதிகளின் படி தவறு. அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமானால நேரடியாக தங்களுக்குள்தான் பேசிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து வீரர்களிடம் நேரடியாக பேசுவது ஐபிஎல் விதிமீறல் ஆகும்.  இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.