1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (10:50 IST)

முதலில் பயப்படுவதை நிறுத்துங்கள் – ஆஸி வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்!

ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சில் எங்கே அவுட் ஆகிவிடுவோமோ என்ற பயத்திலேயே விளையாடுவதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆவேசமடைந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 200 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதையடுத்து இந்திய அணி வெற்றிக்கு தேவையான 70 ரன்களை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து எடுத்தது. இதன்மூலம் அடிலெய்ட் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து கூறியுள்ள ரிக்கி பாண்டிங் ‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்கே அவுட் ஆகிவிடுவோமோ என்ற பயத்திலேயே விளையாடுகிறார்கள். அதனால் விக்கெட்களை இழந்து தடுமாறுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களைக் கடக்க முடியவில்லை. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்கள் விழுந்தாலும் துரிதமாக ரன்களை சேர்த்தனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தங்கள் பார்முக்கு திரும்பவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.