இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்… PSL தொடரில் இருந்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்?
காஷ்மீரின் பஹல்ஹாம் பள்ளத்தாக்கில் பகுதியில், கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக இந்திய முப்படைகள் நேற்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாதிகள் முகாம்களில் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் முழுக்க தீவிரவாதிகள் முகாம்களில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் ராணுவப் பகுதிகளோ அல்லது குடியிருப்புப் பகுதிகளோ தாக்கப்படவில்லை என இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தரம்ஷாலா மைதானத்தில் நடக்க இருந்த பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலானப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்து PSL தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர்களான ஜோர்டான் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் விலகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மற்ற நாட்டு வீரர்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக PSL தொடர் பாதியிலேயேக் கைவிடப்படலாம் எனத் தெரிகிறது.