கோபித்துக்கொண்ட கே எல் ராகுல்… ஆட்டம் முடிந்ததும் சமாதானப்படுத்திய கோலி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் ஒரு தவறான ஷாட்டால் கோலி தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இந்த ஷாட்டைப் பார்த்து எதிர்முனையில் இருந்த கே எல் ராகுல், கோலியை கடிந்து கோபித்துக் கொண்டார்.
அதற்கு சரியானக் காரணமும் இருந்தது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் தேவைப்படும் ரன்களை விட பந்துகளின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. அப்போது கே எல் ராகுல் கோலி மேல் அதிக சுமை விழக் கூடாது என்று சில பவுண்டரி ஷாட்களை அடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். அதனால் கோலி நிதானமாக விளையாடி இருந்தாலே எளிதாக சதமடித்திருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் அவர் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்ததால்தான் ராகுல் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு போட்டி முடிந்ததும் கோலி, அவரிடம் சிரித்து பேசி சமாதானம் செய்யும் விதமாக நடந்து கொண்டார்.