1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:20 IST)

இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றவர்… நடுவர் குறித்து பேசிய ஹசரங்காவுக்கு தடை!

ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடைசி டி 20 போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றது.

இந்த போட்டியின் இறுதி ஓவரில் கமிந்து மெண்டிஸ் பேட் செய்த போது இடுப்புக்கு மேல் பந்துவீசப்பட்டது. ஆனால் அதற்கு நடுவர் நோபால் கொடுக்கவில்லை. இது இலங்கை அணி போட்டியை தோற்க ஒரு காரணமாகவும் அமைந்தது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா “இந்த பந்து இன்னும் கொஞ்சம் மேலே வந்திருந்தால் பேட்ஸ்மேனின் தலையை தாக்கியிருக்கும். இதைக் கூட கவனிக்கவில்லை என்றால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக இருக்கவே லாயக்கற்றவர். அவர் வேறு எதாவது ஒரு பணிக்கு செல்லலாம்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து நடுவரை தகாத வார்த்தையால் விமர்சித்த ஹசரங்காவுக்கு டிமெரிட் புள்ளிகள் கொடுக்கப்பட்டன. இதனால் அவர் அடுத்து இரண்டு டி 20 போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.