1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (14:34 IST)

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

Cricket
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை மேற்கிந்திய அணி தன் வசமாக்கியுள்ளது.
 
தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. கடந்த  24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் சபினா  மைதானத்தில் இன்று நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 7  விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். மேற்கிந்திய அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்  3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் மேற்கிந்திய அணி முன்னிலையில் உள்ளதோடு தொடரையும் கைப்பற்றி உள்ளது.