ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (16:42 IST)

தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரில் யார் சிறந்த கேப்டன்… பும்ரா அளித்த பதில்!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகிய மூவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “என்னை பொறுத்தவரை நான்தான் சிறந்த கேப்டன். பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருந்தாலும் எனக்கு நான்தான் பேவரைட். தோனியின் கீழ் விளையாடிய போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.  கோலியின் கீழ் விளையாடிய போது ஃபிட்னெஸ்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ரோஹித் ஷர்மா வித்தியாசமானவர். அவர் வீரர்களின் மனதில் உள்ளதைப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்” எனப் பேசியுள்ளார்.