வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:27 IST)

காஷ்மீர் விவகாரம்: "திமுக போராட்டம் நடத்துவது ஏன்?" - டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

ஜம்மு & காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று நேற்று (திங்கட்கிழமை) திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பு மற்றும் நிலைப்பாடு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.

"காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியே நாங்கள் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவு 370 விவகாரத்தை பொறுத்தவரை, அதுகுறித்து அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களே முடிவெடுக்க வேண்டும். அது மத்திய அரசின் முடிவாக இருக்கக் கூடாது. அந்த சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை மத்திய அரசு உடைத்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, உமர் அப்துல்லா, அவருடைய மகன் மற்றும் காஷ்மீரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை கைது செய்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்குள் செல்ல முடியவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.
அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது அங்கே தொழில் வளர்ச்சியை பெருக்கி இருக்கலாம். மாணவர்களுக்கு உதவிகரமாக சட்டங்களை இயற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் அப்போது எதுவும் செய்யவில்லை, என்று கூறினார் இளங்கோவன்.


வரும் 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்திற்கு, அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். முத்தலாக் தடை சட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருத முடியாது. அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், முஸ்லிம் மதத் தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்றதொரு சட்டம் 1961இல் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டபோது, இருபாலினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றம் முத்தலாக் தவறு என்று தான் கூறியுள்ளதே தவிர விவாகரத்தே தவறு என்று கூறவில்லை. அவர்கள் வேறெதாவதொரு மாற்றுச் சட்டம் கொண்டு வர வேண்டும். பாஜகவினர் சில சமூகத்திற்கு ஆதவரவாக செயல்படுகின்றனர். நாட்டின் மதசார்பற்ற தன்மையை குலைகின்றனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும்.

அரிசி விலை உயர்த்தப்பட்டால் அதற்கு மானியம் கொடுக்கப்பட்டு அதன் விலை கட்டுப்படுத்தப்படுவது போல, சாமானிய மக்கள் பாதிக்கப்படாதவாறு பாலின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்" என்று தனது பேட்டியின்போது அவர் கூறினார்.