1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (09:03 IST)

யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

யுக்ரேனின் மேரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
 
இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.
 
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை மிக மோசமாக சேதமடைந்துள்ளது தெரிகிறது. இதில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி யுக்ரேனிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
 
மேரியோபோல் துறைமுக நகரத்தை உள்ளடக்கிய டொனெட்ஸ்க் பகுதியின் நிர்வாகத்தின் தலைவரான பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில், இந்த தாக்குதலில் இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் யாரும் காயப்பட்டு உள்ளதாக தெரியவில்லை, என்றும் கூறினார்.
 
ரஷ்ய படையினர் மக்கள் வெளியேறுவதற்கான போர்நிறுத்தத்தை அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார் என இன்டர்ஃபாக்ஸ் யுக்ரேன் (Interfax Ukraine) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிகிறது.
 
மேரியோபோல் நகர சபை இந்த தாக்குதல் "மிகப்பெரிய சேதத்தை" ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள காணொளியில், தாக்குதலில் எரிந்த கட்டடங்கள், சேதமடைந்த கார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெரிய பள்ளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தாக்குதல் நடந்த காணொளிகள் காட்டும் இடங்களை பிபிசி உறுதிசெய்துள்ளது.
 
அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, வெளியிட்ட சமீபத்திய காணொளியில் யுக்ரேனிய மொழியில் இல்லாமல் சில இடங்களில் ரஷ்ய மொழியில் பேசினார்.
 
அதில், இந்த தாக்குதல் ஒரு போர் குற்றம் என்றும் "மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் மீது கூட பயத்தால் தாக்குதல் நடத்துகிறார்கள். ரஷ்யா எப்படிப்பட்ட நாடு?" என்று கேள்வி எழுப்பினார்.