1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (21:34 IST)

பிரிட்டன் விசா: பல இந்தியர்களுக்கு இனி கனவாகவே கலைந்து போகும் ஆபத்து

england pm
பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ளது.
 
புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரிட்டன் எடுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பிரிட்டனுக்குள் வருபவர்கள் எண்ணிக்கைக்கும் வெளியே செல்பவர்கள் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது.
 
இதனால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
 
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி
 
பிரிட்டனுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நிகர குடியேற்றம் எனப்படும் பிரிட்டனுக்குள் வரும் நபர்கள் மற்றும் பிரிட்டனை விட்டு வெளியேறும் நபர்களுக்கு இடையேயான நிகர புலம்பெயர்ந்தோர் வித்தியாசம் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக 7 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டியது.
 
தற்போதைய புலம்பெயர் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில்தான் விசா விதிகளில் பிரிட்டன் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. மாற்றப்பட்ட விதிகள் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனில் வேலை செய்ய சிறப்புத் திறன் பணியாளர் விசாவை பெறுவதற்கான தற்போதைய குறைந்தபட்ச ஆண்டு ஊதியமாக 26,200 பவுண்ட் உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய் ஆகும். தற்போது இந்த உச்ச வரம்பு 38,700 பவுண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ஆயிரம் ரூபாய்.
 
அதேநேரம் சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சம்பள அளவின் (National Pay Scale) கீழ் வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இது மத்திய தர திறன்மிகு பணியாளர்களை பாதிக்கக்கூடும் என புலம்பெயர்ந்தோர் கண்காணிப்பகம் கூறுகிறது. சமையல் வேலை மற்றும் கசாப்பு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பொதுவாக ஆண்டுக்கு 30,000 பவுண்டுக்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களையோ, துணையையோ அழைத்துவந்து உடன்வாழ விரும்பும் பட்சத்தில், Family Visa எனப்படும் குடும்ப விசா பெற அவரது குறைந்தபட்ச வருமானம் 38,700 பவுண்டாக இருக்கவேண்டும். அதாவது சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய். மாதத்துக்கு சுமார் 3 லட்சத்து 33 ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.
 
முன்னதாக இது ஆண்டுக்கு 18,600 பவுண்டாக இருந்தது. தற்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இது குறைந்த வருவாய் ஈட்டும் நபர்கள், இளைஞர்கள், பெண்கள், லண்டனுக்கு வெளியே வசிப்பவர்கள் ஆகியோர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்
 
ஆகவே குடும்பத்துடன் பிரிட்டன் குடியேற விரும்பும் நபர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
 
 
அடுத்ததாக, பிரிட்டனில் வேலை செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளர்கள் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ தங்களுடன் பிரிட்டனுக்குள் அழைத்துவர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மற்ற வேலை விசாக்கள் மூலம் பிரிட்டனுக்கு வருபவர்களை விட சுகாதாரம் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களாக வருபவர்களால் அதிகளவில் குடும்ப உறுப்பினர்கள் அழைத்துவரப்படுவதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் தரவுகள் கூறுகின்றன.
 
நடப்பு ஆண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான பராமரிப்புப் பணியாளர்களுக்கு விசா வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்புடையவர்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்பட்டன
 
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடையால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பராமரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. எனினும், பிரிட்டனில் பராமரிப்புப் பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவதாக பிரிட்டன் அரசு கூறுகிறது.
 
தேசிய சுகாதார சேவையை பயன்படுத்துவதற்காக வருடாந்திர கட்டண விசா வைத்திருப்பவர்கள் செலுத்தும் மருத்துவத்திற்கான தனி மேற்கட்டணம் 624 பவுண்டுகளிலிருந்து 1,035 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 1லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் இதற்கு மட்டும் செலுத்தவேண்டம்.
 
அதே சமயம் சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு இந்த மேற் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சில சலுகை உள்ளது.
 
 
பிரிட்டனில் படிப்பை முடிப்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை அங்கு தங்கியிருக்க பட்டதாரி விசா அனுமதியளிக்கிறது.
 
இந்த விசா தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும்பொருட்டு, திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளோம் என பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மாணவர்கள் பெற்றோர்களை அழைத்துவருவதற்கான அனுமதியை குறைக்கும் திட்டங்களையும் பிரிட்டன் அரசு முன்னதாக வெளியிட்டுள்ளது.
 
மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்னரே முழு நேர வேலை செய்வதற்கான அனுமதியை வழங்கும் Work விசாவுக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
10,000 ஆண்டுகளுக்கு முன் கூரிய நகங்களால் பாறையைக் குடைந்து ராட்சத கரடிகள் உருவாக்கிய சுரங்கப் பாதைகள்
 
பிரிட்டனுக்கு புலம்பெயர்வோர்கள் பட்டியலில் அதிகம் இருப்பது ஐரோப்பியர் அல்லாத நாட்டினர்தான்.
 
இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஜூன் 2023 நிலவரப்படி, ஓராண்டில் புலம்பெயர்ந்தவர்களில் 2,53,000 பேர் இந்தியர்கள். இதற்கு அடுத்தபடியாக நைஜீரியர்கள் உள்ளனர்.
 
1,41,000 நைஜீரியர்கள் கடந்த ஆண்டு புலம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சீனர்கள், பாகிஸ்தானியர்கள், யுக்ரேனியர்கள் உள்ளனர்.
 
எனவே, பிரிட்டனின் புது விசா நடைமுறை இந்த ஐந்து நாட்டைச் சேர்ந்தவர்களை அதிகளவில் பாதிக்கக்கூடும்.