1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (10:57 IST)

தமிழ்நாடு மழை: எத்தனை நாளைக்கு நீடிக்கும்? எங்கெங்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது- சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, மழைநீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
மழை தொடர்ந்து பெய்து வருவதால் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
சட்டென்று மாறிய வானிலை
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டியெடுத்து வந்தது. கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும் கூட சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்து வந்தது. வெயிலின் வாதை தாங்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியது.
 
வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தாலும், எதிர்பார்ப்புக்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
 
சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை நீடித்து வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
 
 
 
சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கம்
கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் பருவமழைக்காலத்தைப் போல வெள்ளமென மழைநீர் பாய்ந்தோடுகிறது.
 
சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சுரங்க பாலங்களில் அதிகாலை 2.30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், காலை 8 மணியளவில் கூட சென்னையில் சூரியன் தென்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக, வெளிச்சம் இல்லாமல் வானம் இருண்டே காணப்பட்டது.
 
யாருக்கெல்லாம் விடுமுறை?
சென்னை மற்றும் புறநகரில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்களை இயக்குவது சிரமமாகியுள்ளது. இதனால், காலையிலேயே அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
 
தொடரும் மழையால், மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எத்தனை மழை நீடிக்கும்?
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை தொடரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்யசை ஒட்டியே இருக்கக் கூடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் வியாழக்கிழமை வரை அடுத்த 4 நாட்களுக்கு லட்சத்தீவுகள், கேரள -கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் அங்கே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.