செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By SINOJKIYAN
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (23:04 IST)

கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்; மலேசியாவில் 8 பேர் பலி

கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்; மலேசியாவில் 8 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்று சீனாவுக்கு அடுத்து வேகமாகப் பரவிய நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூர் இந்தச் சவாலை உலகத் தரத்திலான நிபுணத்துவத்துடன் அணுகி வருகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பு அந்நாட்டை பலமுறை பாராட்டி உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 75 வயதான சிங்கப்பூர் பெண்மணி ஒருவரும், 64 வயது இந்தோனீசிய ஆடவரும் சிங்கப்பூரில் இன்று காலை உயிரிழந்துள்ளனர். இறந்துபோன பெண்மணி ஒரு இருதய நோயாளி என்றும், கடந்த 26 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

அதே போல் உயிரிழந்த இந்தோனீசிய ஆடவரும் இருதய நோயாளிதான். சிங்கப்பூர் வருவதற்கு முன்பு இந்தோனீசியா மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் 9 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.

"சிங்கப்பூரில் கொரோனாவுக்கு இருவர் பலியானதால் சிங்கப்பூரர்கள் வருத்தத்தில் இருப்பீர்கள். ஆனால் இச்சமயத்தில் அச்சம் அடையாமல் தைரியமாக இருக்க வேண்டும்" என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கேன் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 131 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே சிங்கப்பூரில் மூடப்பட்டிருக்கும் பாலர் பள்ளி உட்பட அனைத்துப் பள்ளிகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.