டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிபயணம் மேற்கொண்டது அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனது பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, "எந்த அரசியல் தலைவரையும் சந்திக்க நான் டெல்லிவரவில்லை. டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தைக் காண வந்தேன்," என்று விளக்கம் அளித்தார்.
சமீபத்தில் டெல்லி புஷ்ப் விஹாரில் அமைந்துள்ள அதிமுகவின் புதிய அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது. தற்போது நேரில் சென்று பார்வையிடவே அவர் சென்றதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லிபயணம் பல்வேறு அரசியல் கணிப்புகளை உருவாக்கிய நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவரான முன்னாள் அமைச்சர் வேலுமணியும் டெல்லி சென்றதால் இருவரும் இன்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இவை அனைத்தும் தமிழக அரசியலில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதற்கான பதில் விரைவில் தெரியும்,
Edited by Mahendran