1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (17:29 IST)

வாராக்கடனுக்கு சொத்துகள் பறிமுதல்: “முடமான பின் வைத்தியத்திற்கு மூலிகை தேடுவது”

வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் 17 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

 
 
முறைகேடுகளைத் தடுக்க இதுதான் சரியான வழியா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இது தொடர்பாக நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
 
சக்தி சரவணன் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், இமாலய அளவு வாராக் கடன் தொகைக்கு இம்மி அளவும் உதவாத உடைமைகளைப் பறிமுதல் செய்வதாகச் சொல்வது காற்றில் கரைந்த அலைக்கற்றையை கையால் பிடிப்பதற்குச் சமமானது. முறைகேடுகளின் மூலத்தை முளையிலே களைவதற்கான முனைப்பு எடுத்திருக்க வேண்டும், முடமான பின் வைத்தியத்திற்கு மூலிகை தேடுவது வெறும் காலத்தைத்தான் முடக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
 
கோபிநாத் முருகேசன் என்பவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், உடமைகளின் மதிப்பு கடன் தொகையில் 1% கூட வராது. இது கண்துடைப்பு. மக்களை ஏமாற்றும் வேலையே என்று தெரிவித்திருக்கிறார்.
 
ரெங்கசாமி குமரன் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், தும்பைவிட்டு வாலைப்பிடிப்பது சரியானதன்று. வங்கிக் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடந்துவருகிறது. இந்தக் கூட்டுக்கொள்ளையில் முக்கிய பங்கு வங்கி அதிகாரிகளுக்கே. அவர்களுடைய சொத்துக்களையும் பறிமுதல் செயவேண்டும் என்று கூறியுள்ளார்.
 
அ.ப. மோகன் என்ற நேயர், சொல்வது யாவர்க்கும் எளிதாம்; சொல்லிய வண்ணம் செயல், என்று சுருக்கமாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
 
நெல்லை டி முத்துசெல்வம் என்ற நேயர், ஒரு சாதாரண குடிமகனுக்கு வங்கி கடன் வழங்கும் போது கடைப்பிடிக்கும் நடைமுறைகளை பணக்காரர்களிடம் கடைபிடிக்க வில்லை. வங்கி அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால்தான் இது நேர்ந்தது. அதனால் அவர்கள் வாங்கிய கடனை இவர்களின் சம்பளத்திலிருந்தும் ஒய்வூதியத்திலிருந்தும் பிடித்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் தான் வங்கி அதிகாரிகளின் தூக்கம் கலையும் என்று ஆலோசனை கூறி கருத்து கூறியுள்ளார்.
 
உமாசங்கர் ஆதவன் டுவிட்டரில் தெரிவித்திருக்கும் கருத்தில், ஆயுள் முழுவதும் வெளியில் வராதபடி ஜாமீன் வழங்கா சிறையில் தள்ள வேண்டும் மற்றும் தன் வாரிசுகளின் பெயரிலுள்ள அனைத்துச் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
 
வினோத் அச்சப்பன் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், அந்த சொத்தில் இந்த மதிப்பு இருந்தால் ஏன் அவர்கள் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் நம்மால் இழுத்து வர முடியாதா? அவர்கள் தப்பிச் செல்லத் துணை போன அத்தனை நபர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்கிறார்.
 
சதீஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது முன்பே எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை. காலம் தாழ்த்திய நடவடிக்கை. அனைத்தும் கண் துடைப்பே என்கிறார்.
 
சுப்புலட்சுமி என்கிற நேயர், மிச்சத்தை யார் கட்டுவது? ஏமாற்றியவர்களுக்கு தண்டனை, மேலும் இது மாதிரி இன்னொருவர் செய்யாமலிருக்க செய்யப்போகும் திட்டம் இதையெல்லாம் யார் செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சரோஜா சுப்பிரமணியன் என்கிற நேயர், தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதை. அவர்களை தப்ப விட்டுவிட்டு குறைந்த மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவது கண் துடைப்பு நாடகம் என்று கருத்து கூறியுள்ளார்.
 
ஓடி போனவனை பிடடிக்க முடியவில்லை என்றால் என்ன பெரிய அரசாங்கம்? என்பது தேவேந்திரனின் கருத்தாக உள்ளது.
 
ஈஸ்வரமூர்த்தி சீரப்பா என்பவர் இதுவே சரியான அணுகுமுறை என்று பதிவிட்டுள்ளார்.