1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (23:58 IST)

ராஜா சாரி: நிலவில் கால் பதிக்க தகுதி பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க அதிகாரி - யார் இவர்?

அமெரிக்க விண்வெளி அமைப்பான "நாசா", தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், நிலவுக்கு செல்லும் 18 விண்வெளி வீரர்களை இறுதி செய்து அவர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது. இதில் ஒன்பது ஆண் வீரர்களும், ஒன்பது வீராங்கனைகளும் உள்ளனர்.
 
இதில் ஒரு வீரரும் வீராங்கனையும், 2024ஆம் ஆண்டு நிலவின் தெற்குப் பகுதியில் கால் பதிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு 1972ல்தான் அப்பல்லோ 17 விண்கலனில் சென்ற வீரர்கள் தரையிறங்கினார்கள்.
 
இந்த வீரர்கள் குழுவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்ற அமெரிக்க விமானப்படை அதிகாரியும் இடம்பிடித்திருக்கிறார்.
 
யார் இந்த ராஜா சாரி?
 
1977-ம் ஆண்டு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாகீ நகரில் பிறந்தவர் ராஜா. இவரின் தந்தை ஸ்ரீநிவாஸ் வி சாரி, ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்தவர். பொறியாளரான இவர், அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.
 
ஐயோவா மாகாணத்தில், வாட்டர்லூவில் இருக்கும் கொலம்பஸ் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார் ராஜா. கொலராடோவில் இருக்கும் அமெரிக்க விமானப் படை கல்லூரியில் இருந்து விண்வெளிப் பொறியியல் பட்டம், மாசசூசெட்ஸ் அறிவியல் நிறுவனத்தில் இருந்து ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித்துறையில் முதுகலை ராஜா சாரி பட்டம் பெற்றார்.
 
மேலும், மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கடற்படை பயிற்சி பைலட் கல்லூரயிலும் இவர் விமானியாக தகுதி பெற்றிருக்கிறார். கன்சாஸில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டு கல்லூரியிலும் இவர் பயிற்சி முடித்தார்.
 
 
ராஜா சாரி, அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்தவர். 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எஃப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
 
நிலவில் மனிதன் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகமா?
நாசாவின் புதிய முயற்சி: நிலவில் பாறைகளை சேகரிக்க பணம் தரும் திட்டம்
ஸ்பேஸ் எக்ஸ்: ஃபால்கன் & டிராகன் விண்வெளித் துறையின் புதிய உச்சம்
எஃப் 35, எஃப் 15, எஃப் 16, எஃப் 18, எஃப்15இ போன்ற போர் விமானங்களை 2,000 மணி நேரங்களுக்கு மேல் நாஜா இயக்கி இருக்கிறார். ஆபரேஷன் இராகி ஃப்ரீடம் மற்றும் கொரிய தீபகற்பத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க படைகள் களமிறக்கப்பட்ட நடவடிக்கைகளில் ராஜா சாரியும் பங்கேற்று இருக்கிறார்.
 
 
கடந்த ஆகஸ்ட் 2017-ல் ராஜா சாரி, நாசாவில் இணைந்தார். தன் இரண்டு ஆண்டு விண்வெளி வீரர் பயிற்சியையும் நிறைவு செய்துவிட்டு, விண்வெளி பயணத்துக்கு காத்திருந்தார். தற்போது ஆர்டிமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகியிருக்கிறார்.
 
ராஜா சாரி ஹோலி ஸ்காஃப்ஃபர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது தாய் பெக்கி சாரியும் இவருடன் தான் ஐயோவாவில் வாழ்ந்து வருகிறார்.
 
 
"நான் என் தந்தையால் ஊக்குவிக்கப்பட்டேன். என் தந்தை மிக இளம் வயதில், ஹைதராபாத்தில் இருந்து பொறியியல் பட்டத்துக்காகவும், நல்ல உயர் கல்வியைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடனும், சிறப்பாக வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்காவுக்கு வந்தார். அது என் வாழ்கையில் பிரதிபலித்தது" என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார் ராஜா சாரி.
 
"என் குழந்தைப் பருவம் முழுக்க, கல்வியில் என் கவனம் இருந்தது. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் கல்வி மிகவும் அவசியம்" என கூறியிருக்கிறார் ராஜா.
 
நாசா, நிலவுக்கு தனது முதல் பெரிய ராக்கெட்டை அடுத்த வருடம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1 என அழைக்கப்படுகிறது. இதில் முதலில் நிலவைச் சுற்றும் ஓரியன் என்னும் ஆளில்லா விண்கலன் செலுத்தப்படும். பின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் 2024ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் நிலவில் தடம் பதிப்பார்கள்.
 
18 வீரர்கள் யார், யார்?
 
 
நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் திட்டத்தில் இடம்பெறும் பெயர்களை ஃபுளோரிடாவில் உள்ள நாசா மையத்தில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் புதன்கிழமை அறிவித்தார். அப்போது அவர், "அன்பார்ந்த அமெரிக்கர்களே, நம்மையெல்லாம் நிலவுக்கும் அதைக் கடந்தும் அழைத்துச் செல்லப்போகும் எதிர்கால நாயகர்களை உங்களுக்கு வழங்குகிறோம்" என்று கூறி வீரர், வீராங்கனைகளின் பெயரகளை அறிவித்தார்.
 
 
 
இந்த பட்டியலில் ராஜா சாரியுடன் சேர்த்து ஸ்டெஃபானி வில்சன், கிறிஸ்டினா கோச், விக்டர் களோவர், ஜோசஃப் அகாபா, கேலா பார்ரன், மேத்யூ டோமினிக், வாரன் ஹோபர்க், ஜானி கிம், கெஜெல் லிண்ட்கிரென், நிகோல் ஏ.மான், ஏன் மெக் கிளென், ஜெஸ்ஸிகா மெர், ஜாஸ்மின் மொஹம்பெலி, கேட் ரூபின்ஸ், பிராங் ரூபியோ, ஸ்காட் டிங்கிள், ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ் இடம்பெற்றுள்ளனர்.
 
 
கேட் ரூபின்ஸ், இரு முறை விண்வெளி பயணம் மேற்கொண்டவர்
 
இதில், ஸ்டெஃபானி வில்சன், ஜோசஃப் அகாபா ஆகியோர் மூன்று முறையும், கேட் ரூபின்ஸ் முறையும், ஏன் மெக்கிளென், ஜெஸ்ஸிகா மெர், ஸ்காட் டிங்கிள் தலா ஒரு முறையும் விண்வெளிக்கு சென்றுள்ளனர். மற்றவர்கள் விண்வெளி பயணத்துக்கு புதியவர்கள்.
 
கிறிஸ்டினா கோச், இந்திய விண்வெளி வரலாற்றிலேயே அதிக நேரம் விண்வெளியில் செலவழித்த முதல் வீராங்கனையாவார். இவர் மொத்தம் 328 நாட்கள் 13 மணி 58 நிமிடங்களை விண்வெளியில் கழித்துளளார்.
 
விக்டர் கிளோவெர், சமீபத்தில்தான் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றவர்.