1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (16:02 IST)

சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய காவல்துறை கண்காணிப்பாளர் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

ஊரடங்கு உத்தரவால் ராமநாதபுரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்த இலங்கை அகதி ஒருவருக்கு அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உதவியது அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தவர் ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த சிறுமிக்கு ரத்த புற்று நோய் உள்ளதால் கடந்த 8 மாதங்களாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு மாதம் ஓரு முறை மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆனால் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வாகன போக்குவரத்து ஏதுமின்றி இந்த மாதம் பரிசோதனைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்ல சிறுமியின் தாயார், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமாரை தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மண்டபம் தனி பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்து அகதிகள் முகாமில் தங்கியுள்ள விபிக்சாவின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்,

பின்னர் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து காவல்துறையின் வாகனத்தில், சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிகிச்சை பெற்ற சிறுமி மீண்டும் மாலை அதே காவல் துறை வாகனத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு விடப்பட்டார்.

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய ராணி, "எனது மகளுக்கு மாதம் ஒரு முறை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையத்தில் ரத்த மாதிரிகள் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையின் முடிவை பொறுத்து மருந்து மாத்திரைகள் மாற்றி வழங்கப்படும். சிகிச்சைக்கு செல்லாவிட்டால் நோயின் தாக்கம் அதிகரித்துவிடும். எனவேதான் காவல்துறை கண்காணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினேன்.

அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தது மட்டுமில்லாமல் பேருந்து வசதியில்லாததால் மருத்துவமனை செல்ல காவல்துறை வாகனத்தை அனுப்பி மிக பெரிய உதவி செய்தார்" என்று தெரிவித்தார்.

வருண்குமார் செய்த இந்த உதவி இலங்கை அகதிகளை மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.