வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (16:10 IST)

விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து இதுவரை 96% பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும் போதும், கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.