1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (23:53 IST)

கொரோனா வைரஸ்: வேலை போனதால் ஆன்லைனில் கவர்ச்சியான புகைப்படங்களை விற்கும் யுவன், யுவதிகள்

"அது என் தேவையின் அடிப்படையிலானது. எனக்கு வருமானம் தேவைப்பட்டது. நான் நிர்வாணமாக வேண்டும் என்றோ எனது புகைப்படங்களைப் பதிவிட வேண்டும் என்றோ நான் விரும்பியதாக இதை எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்கிறார் மார்க்.
 
கொரோனா வைரஸ் தாக்குதல் சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் வேலையை இழந்தார். சந்தாதாரர் அடிப்படையிலான சமூக வலைதளம் ஒன்றில் தன்னுடைய அரை நிர்வாண படங்களை அவர் பதிவிடத் தொடங்கினார்.
 
32 வயதான அவர் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள கடலோரப் பகுதி சொகுசு விடுதியில் பணியாற்றி வந்தார். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விடுதியில் அவர் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். ஆனால் முடக்கலை அமலுக்கு வந்த போது அவருடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
 
 
தன்னுடைய OnlyFans பக்கத்தில் உடலைக் காட்டும் தன்னுடைய படங்களை பதிவிடுவதற்கான எதிர்ப்புகளை மார்க் தாண்டிவிட்டார்.
 
``என் கண்ணில் பட்ட எல்லா வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கும் நான் விண்ணப்பித்தேன். எல்லா சூப்பர் மார்க்கெட் வேலைகளுக்கும் விண்ணப்பித்தேன். JobCentre இணையதளத்தில் இடம் பெற்றுள்ள வேலை எதுவாக இருந்தாலும், அனைத்திற்கும் நான் விண்ணப்பித்தேன்'' என்று மார்க் கூறுகிறார்.
 
பின்னர், தனது நண்பர் ஒருவருடைய யோசனையின்படி OnlyFans கணக்கு ஒன்றை அவர் தொடங்கி இருக்கிறார்.
 
படைப்பாளிகளின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது நேரலை ஒளிபரப்புகளைக் காண்பதற்கு, அந்த தளத்தில் உள்ளவர்கள் மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் அந்த நிறுவனத்திற்கு கமிஷனாக எடுத்துக் கொள்ளப்படும். நிர்வாணப் படங்களை விற்பவர்களை இலக்காகக் கொண்ட தளமாக அது கிடையாது என்றாலும், பலரும் நிர்வாணப் படங்களை விற்கின்றனர்.
 
தன்னுடைய சுய குறிப்பில் பொறுப்புத் துறப்பு பகுதியில் ``முன்பகுதியின் முழுமையான நிர்வாணம்'' கிடையாது என்று அவர் குறிப்பிட்டிருந்தாலும், அந்த சூழ்நிலை உருவாகத் தொடங்கிவிட்டது. கடந்த நான்கு மாதங்களில் தனக்கு 1500 பவுண்ட்கள் கிடைத்திருப்பதாக மார்க் மதிப்பிட்டுள்ளார். இதேபோன்ற படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடுகிறார்.
ஆன்மாவை விற்கிறேன்
 
``OnlyFans எனது வாடகையைக் கட்டுவதற்கும், உணவுக்கும், எனது வாகனத்தின் செலவுகளைச் செய்யவும் வருமானத்தைக் கொடுத்துள்ளது. வாழ்க்கைக்கு அவசியமானவற்றின் செலவுகளுக்கு அது வருவாயை அளித்துள்ளது'' என்கிறார் மார்க்.
``அதேசமயத்தில், இதில் எதிர்மறை விஷயமும் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார். முதலில் இந்தப் பக்கத்தை உருவாக்கிய போது தனது ஆன்லைன் நண்பர்களிடம் இருந்து ``திட்டி'' தகவல்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
 
``என் ஆன்மாவை நான் விற்பதாக அவர்கள் கூறினர். நான் எல்லோருடனும் உடலுறவு வைத்துக் கொண்டு, காணொளிகள் வெளியிடப் போகிறேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். என்னுடைய பக்கம் அப்படிப்பட்டது கிடையாது'' என்று மார்க் கூறினார்.
பாலுறவு செயல்பாடுகளின் அப்பட்டமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுமாறு வரும் பல கோரிக்கைகளை மார்க் நிராகரித்துவிட்டார். ஆனால் பணத் தேவையில் இருக்கும் மற்ற பயனாளர்கள் அவ்வாறு செய்யக் கூடிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடும் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
 
"நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை
ஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்
கவர்ச்சிகரமான வாய்ப்பு
 
``இளவயதினர் இப்போது சமூக ஊடகங்களில் எல்லாவற்றையும் பதிவிடுகிறார்கள். இன்னும் ஓரடி கூடுதலாக செய்கிறார்கள். அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள்'' என்று அவர் கூறியுள்ளார். ``இப்போதைய சூழலில் வேலை கிடைக்காத நிலையில், இது கவர்ச்சிகரமான வாய்ப்பாக உள்ளது என அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது'' என்றும் மார்க் குறிப்பிட்டுள்ளார்.
 
``வேலையை இழந்துவிட்ட என் நண்பர்களில், நான் மட்டும் தான் இப்படி செய்கிறேன் என்று சொல்ல முடியாது'' என்று ரெபெக்கா (உண்மையான பெயர் அல்ல) என்று கூறியுள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அந்த 22 வயதுப் பெண் கலைப் பொருள் தயாரிப்பு பயிற்சி நிலை ஊழியராக இருந்தார். ஏப்ரல் மாதம் தனது பெற்றோரிடம் திரும்பி வந்துவிட்டார்.
 
கடந்த காலத்தில் இணையத்தில் நிர்வாணத்தை விற்று சம்பாதித்துள்ள நிலையில், ``என் வேலை போன பிறகு இதை மிகத் தீவிரமாக பரிசீலிக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது'' என்று அவர் கூறினார்.
 
அவர் OnlyFans கணக்கு ஒன்றைத் தொடங்கினார். ``குறைந்த அளவு'' நிர்வாணத் தன்மை கொண்ட படங்களை அவர் இப்போது பதிவிடுகிறார். தன்னுடைய அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் இந்த படப்பிடிப்புகளை அவர் வைத்துக் கொள்கிறேன். இவருடைய பக்கத்தில் வரும் தகவல்களைப் பார்ப்பதற்கு மாதம் 5.55 பவுண்ட் செலுத்த வேண்டும். இதுவரையில் இதன் மூலம் இவருக்கு பல நூறு பவுண்டுகள் வருமானம் கிடைத்துள்ளது.
 
`இது ஆபத்தானதாக இருக்கலாம்'
 
யாருடன் இணையத்தில் பேசுகிறோம் என்ற நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ரெபெக்கா கருதுகிறார். ``அது வருமானத்துக்கான ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. ஆனால் அதில் ஆபத்து வாய்ப்புகளும் உள்ளன'' என்று அவர் கூறுகிறார்.
 
``நீங்கள் உங்கள் உடலைத் திறந்து காட்ட வேண்டும். ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும். அது அபாயகரமாகவும் இருக்கலாம்'' என்று அவர் தெரிவித்தார்.
 
புகைப்படம் எடுத்தல், தயார் படுத்துதல், சமூக ஊடகத்தில் விளம்பரப்படுத்துதல், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்தல் போன்ற, இதில் தொடர்புடைய வருமானம் தரப்படாத வேலைகளின் அளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது என்று கிரேட்டர் மான்செஸ்டரைச் சேர்ந்த லெக்சி (இதுவும் உண்மையான பெயர் அல்ல) கூறுகிறார்.
 
போல் டான்ஸ் பயிற்சியாளரும், ஆடை களையும் கலைஞருமான 36 வயதான இவர் முடக்கநிலையால் வேலையை இழந்த பிறகு OnlyFans பக்கத்தை உருவாக்கியுள்ளார். முதலாவது மாதத்தில் அவருக்கு ஆயிரம் பவுண்ட்கள் வருமானம் கிடைத்தது. வாடகையை செலுத்தவும், பில்களைக் கட்டவும் இந்தப் பணம் உதவிக்கரமாக இருந்தது.
 
``அடிப்படையில், கமிஷன் அடிப்படையிலான விற்பனை நபராக நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு பணம் கிடைக்காது'' என்றார் அவர்.
 
இதுபோன்ற தளங்கள் பிரதான இடத்தைப் பிடிப்பது ``இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது'' என்று அவர் கூறினார்.
 
``பொதுவெளியில் உள்ளவர்களின் பார்வைக்கு அதிகமானவற்றைக் கொண்டு வருவதன் மூலம் தயக்கங்களை இது நீக்குகிறது என்பது நல்ல விஷயம். ஆனால் நிறைய பேர் பதிவில் சேரும்போது மலிவான விஷயங்களைப் பல வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்'' என்கிறார் அவர். மார்க்கெட்டில் தேவைக்கும் அதிகமாக சேவையாளர்கள் பெருகிவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
 
 
OnlyFans பக்கத்தில் கவர்ச்சியான படங்களைப் பதிவிட்டதை விமர்சிப்பதை Love Island போட்டியில் பங்கேற்றவரான மேகன் பார்ட்டன்-ஹன்சன் முன்பு கண்டித்துள்ளார்.
இந்தத் தொழிலில் ஈடுபடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ``உங்களுடைய பதிவுகளை உருவாக்குவதற்கு முன்பு எல்லைகளை வரையறை செய்து கொள்ளுங்கள். எப்போதும் அந்த வரையறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
 
வாடிக்கையாளர்களின் தொந்தரவுகளுக்கு ஆளாகும் ஆபத்தும் உண்டு. அந்தரங்கம் என்பது கவலைக்குரிய விஷயம் என்று மார்க், ரெபெக்கா, லெக்சி ஆகிய மூவரும் கூறுகின்றனர். ஆன்லைனில் உங்கள் அடையாளத்தை மறைத்து வைப்பது சிரமமானது. உங்களுடைய பதிவுகள் திருடப்படலாம் என்று தெரிவித்தனர்.
 
அதுபோன்ற தளங்களில் உள்ள புகைப்படங்கள் அல்லது காணொளிகளைக் காப்பி செய்து, வேறு தளங்களில் பகிரப்படலாம். இதனால் அதை விற்பவரின் வருமானம் பாதிக்கப்படும். அல்லது அந்த வீடியோ அல்லது புகைப்படத்தை நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடும்.
இந்த ஆண்டின் முந்தைய பகுதியில், தங்கள் தளத்திலிருந்து பயனாளர்களின் பதிவுகள் ``வெளியில் கசிவது'' தெரிய வந்ததாக OnlyFans கூறியுள்ளது. தங்கள் தளத்தில் படைப்பாளிகள் பதிவிடும் விஷயங்களை, பகிரக் கூடாது என்ற கொள்கையை மீறுவதாக இது உள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
இந்த இணையதளத்தின் வயதை உறுதிப்படுத்தும் நடைமுறையை ஏமாற்றிவிட முடியும் என்பதற்கான ஆதாரம் இருப்பதை BBC Three புலனாய்வுக் குழு கண்டறிந்தது. அதாவது 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களும் தங்களுடைய அப்பட்டமான காட்சிகளைச் சட்டவிரோதமாக இந்த இணையதளங்கள் மூலம் விற்க முடியும்.
 
குறிப்பிட்ட வயதுக்கும் குறைவானவர்கள் தங்கள் தளத்தில் ``சட்டவிரோதமான அனுமதி'' பெற்றிருப்பதாகத் தகவல் ஏதாவது கிடைத்தால், உடனடியாக ஆய்வு செய்து, அந்தக் கணக்கை நீக்குவதாக அப்போது OnlyFans கூறியது.
புதிதாகச் சேருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
 
இருந்தாலும் நிறைய பேர் OnlyFans போன்ற இணையதளங்களில் சேர்ந்து வருகின்றனர்.
மார்ச் மற்றும் ஜூலைக்கு இடைப்பட்ட மாதங்களில், பிரிட்டன் படைப்பாளிகள் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்து சுமார் 95 ஆயிரத்தைத் தொட்டுள்ளது என்று பிபிசியிடம் OnlyFans தெரிவித்துள்ளது.
 
 என்ற மற்றொரு பிரிட்டன் இணையதளத்தில், முடக்கநிலை தொடங்கிய பிறகு, புதிதாகப் பதிவு செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
அரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?
 
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை
இதில் உள்ள ஆபத்துகள் பற்றி புதிய பயனாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், விரும்பத்தகாத தகவல்கள் எதுவும் வந்தால் அல்லது தங்களுடைய தகவல்களை முழுமையாக அழிக்க விரும்பினால் உதவும் வகையிலான தகவல்கள் குறித்தும் அறிவிப்புத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறை பேராசிரியர் டீலா சான்டர்ஸ் கூறியுள்ளார்.
 
``நிச்சயமாக இன்னும் நிறைய விஷயங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புதிய தளங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பொறுப்புமிக்க தளமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுகூட இல்லாதவையாக அவை இருக்கலாம்'' என்று அவர் கூறுகிறார்.
 
சமீபத்திய தசாப்தங்களில் மிக மோசமான வேலையிழப்பை நோக்கி பிரிட்டன் செல்லும் போது, இதுபோன்ற துறைகள் இன்னும் வளரத்தான் செய்யும் என்று அந்தப் பெண்மணி கூறியுள்ளார். ``ஆன்லைன் பாலியல் தொழில் என்பது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிந்த விஷயமாக உள்ளது. சமூகத்தில் பரவலாக ஏற்கப்பட்டதாகவும் உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
 
சந்தா அடிப்படையிலான OnlyFans தளத்தின் வளர்ச்சி குறித்து உலக அளவிலான சூப்பர் ஸ்டார் பெயோன்ஸ் விமர்சித்துள்ளார்.
``சட்டவிரோத காப்புரிமை திருட்டு பிரச்சினையில் உதவ வேண்டும் என்ற கடமையுடன், பயனாளர்களின் பதிவுகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை OnlyFans எடுத்து வருகிறது'' என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பதிவுகள் திருடப்படுவது மற்றும் காப்புரிமை மீறல்கள் பற்றி தகவல் தெரியும்போது முறைப்படியான நோட்டீஸ்கள் அனுப்புவதற்கு ஒரு பிரத்தியேக குழு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. திருடப்பட்ட பதிவுகளில் ஏறத்தாழ 75 சதவீத பதிவுகள், மற்ற தளங்களிலிருந்து இந்த ஆண்டில் வெற்றிகரமாக நீக்கப் பட்டுள்ளன என்று அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
``படைப்பாளிகள் உருவாக்கும் படைப்புகளின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை தருகிறோம்'' என்று அவர் கூறினார்.
 
``உள்ளே இணைவதற்கான'' கடுமையான நடைமுறை உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது வலைப்பூ பகுதியை 18 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவை எந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று புதிய பயனாளர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படுவதாகவும் OnlyFans குறிப்பிட்டுள்ளது. ஆனால் ``ஒவ்வொரு படைப்பாளியும் இதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்திருக்க வேண்டும்'' என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
``ஆன்லைன் தளங்களுக்கு சட்டபூர்வ கடமையை உருவாக்கவும், சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பு கொண்டதாகவும், இணையதளம் பொறுப்பேற்கும் நிலையை உருவாக்கும் வகையிலும்'' விதிகளை உருவாக்கத் திட்டங்கள் இருப்பதாக உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். the Online Harms White paper-ல் குறிப்பிட்டுள்ளவாறு இவை அமையும் என்றார் அவர்.
``உலகிற்கு முன்னோடியாக இருக்கப் போகும் இந்த சட்டம், ஆன்லைனில் ஊறுவிளைவிக்கும் பதிவுகள் விஷயத்தைக் கையாளக் கூடியதாக இருக்கும் என்றும், ஆன்லைனில் தகவல்கள் பரிமாறுவதற்குப் பிரிட்டன் பாதுகாப்பான நாடாக இருப்பதை உறுதி செய்வதாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.
இருந்தபோதிலும், அரசின் ஆன்லைன் பாதுகாப்பு மசோதா 2023 அல்லது 2024 வரையில் செயல்பாட்டுக்கு வராது என்று ஜனநாயக பிரபுக்கள் சபை மற்றும் டிஜிட்டல் கமிட்டி தலைவர் சமீபத்தில் கூறியுள்ளார்.