வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:33 IST)

‘என் தந்தைக்கு சில மனநல பிரச்சனைகள் உள்ளன… ஆனால் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்’ – யுவ்ராஜ் சிங்

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

ஆனால் யுவ்ராஜ் சிங் கேரியர் விரைவில் முடிந்ததற்கு தோனிதான் காரணம் என்று யுவ்ராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக தோனி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். இது சம்மந்தமாக அவர் சமீபத்தில் பேசியபோது ““தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை அவர் அழித்துவிட்டார். அவர் இன்னும் 5 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கக் கூடியவர். யுவ்ராஜ் போல ஒரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் ஆகியோர் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்குக்கு பாரத ரத்னா விருதே கிடைத்திருக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கிய நிலையில் தோனி ரசிகர்கள் கடுமையாக யோக்ராஜ் சிங்கை விமர்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சில மாதங்களுக்கு முன்னர் யுவ்ராஜ் சிங் அளித்த ஒரு பேட்டியில் ‘என் தந்தைக்கு சில மனநல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று கூறியுள்ளார். அந்த வீடியோ துணுக்கை இப்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.