திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூச திருவிழா.. இன்று தோரோட்டம்!...

Written By Mahendran
Updated: செவ்வாய், 27 ஜனவரி 2026 (14:34 IST)
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.. இந்த விழா கடந்த 19ஆம் தேதி துவங்கியது.. விழா நாட்களில் காலை, மாலை என இரண்டு முறை முருகன் சுவாமி தெய்வானையுடன் கூடிய ஊர்வலம் நடைபெற்று வருகிறது.. காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பச்சை குதிரை, அன்ன வாகனம், தங்கமயில் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் திருவிதி உலா நடைபெற்று பக்தர்கள் அருள் பாலித்து வருகிறார்கள்.

விழாவின் 9 நாளான இன்று தை கார்த்திகை என்பதால் இன்று காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் சுவாமிக்கும் தெய்வானைக்கும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பக்குளக்கரையில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.. அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

அதன்பின் 16 கால் மண்டபம் அருகே கொண்டுவரப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.. அப்போது பக்தர்கள் ‘அரோகரா’ என்கிற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தார்கள்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்குளத்தில் நாளை தெப்ப உற்சவம் நடைபெறவிருக்கிறது. அதில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளனர்.<>

அடுத்த கட்டுரையில்
Show comments