திருச்செந்தூரில் கோலாகல சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக். 27) வெகு விமரிசையாக நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.
கடந்த அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சம்ஹாரம், இன்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் ஆட்கொண்ட இந்த நிகழ்வு பக்தர்களுக்குப் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.
திருவிழாவிற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக 17 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு, நகருக்குள் வர 25 சுற்றுப் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் மட்டுமின்றி, மற்ற அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது.
Edited by Mahendran
