இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!
திருப்பரங்குன்றம் விவகாரம் இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இரு மதங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதால், இந்து அமைப்புகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இந்து அமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த போது, மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் 144 தடை உள்ளது என்பதால் தற்போது போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனவும் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், "போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும், "போராட்டம் நடத்த எப்போது, எங்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து அரசிடம் கேட்டு பதில் கூற வேண்டும்" என்றும் தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
Edited by Mahendran